நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி அடையாறு, பெருங்குடி பகுதிகளுக்கு 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அடையாறு, பெருங்குடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் 9ம் தேதி காலை 6 மணி வரை மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், 3 மண்டலங்களுக்குட்பட்ட வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வராது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி அடையாறு, பெருங்குடி பகுதிகளுக்கு 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: