துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்து சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவதை மறுக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக்கூடாது துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் : காவல்துறை பணியில் 2016ம் ஆண்டு வரை இந்தத் தண்டனை பெற்றவர்கள் கூட, துறை சார்ந்த ஒதுக்கீட்டின் கீழ் சார் ஆய்வாளர் பணிக்கு போட்டியிட முடியும். 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 386ம் வாக்குறுதியாக ‘காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், உரிய காலத்தில் பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் நாள் கடைசி நாளாகும். காவலர்களுக்கு விதிக்கப்பட்ட துறை சார்ந்த சிறிய தண்டனைகளை தமிழக அரசு நீக்காவிட்டாலோ, அவ்வாறு தண்டனை பெற்றவர்கள் சார் ஆய்வாளர் தேர்வில் பங்கேற்க காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அனுமதி அளிக்காவிட்டாலோ, பல்லாயிரக்கணக்கான காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவு கருகி விடும். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவை நனவாக்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

The post துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்து சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவதை மறுக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: