ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று மாலை ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு பகுதியில் சாலையோர வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடின. யானைகள் சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாமல் யானையைக் கண்டு அச்சமடைந்து சாலையில் நிறுத்தினர்.

அப்போது குட்டியுடன் சாலையில் நடமாடிய ஒரு பெண் யானை ஒரு லாரியின் அருகே சென்று லாரியின் மீது கரும்புத்துண்டு ஏதாவது உள்ளதா என தனது தும்பிக்கையால் தேடிப் பார்த்தது. சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை தன் குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்ற நிலையில் மற்றொரு ஒற்றை யானை மீண்டும் சாலையின் நடுவே அங்குமிங்கும் நடமாடியதால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ள நிலையில் யானைகள் சாலையில் நடமாடும் போது அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை உபயோகிக்க வேண்டாம் எனவும், யானையின் அருகே சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: