ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான இடத்துக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் விரைந்தது..!!

சென்னை : ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான இடத்துக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் விரைந்துள்ளனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் ஒடிசா விரைந்துள்ளனர். தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், மேலும் போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் செல்கின்றனர்.

 

The post ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான இடத்துக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் விரைந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: