கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மின்சார ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ஆகாய நடைபாலமும் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய காவல் நிலையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் வெளியூரில் இருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்பட உள்ளது. சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை சென்னை நகருக்குள் விடக்கூடாது என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு கடிதமும் எழுதி உள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென் மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து வெளியூர் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்” என்றார்.

The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: