ஜுலை 7 முதல் 9ம் தேதி வரை சென்னையில் 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னை: 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் ஜுலை 7 முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் பொன்னவைக்கோ, துணை தலைவர் சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜான் சாமுவேல், பொதுச்செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை மாதம் 7 முதல் 9ம் தேதி வரை சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இம்நாட்டை தொடங்கிவைக்க தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம். உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப்பொருள்.

தமிழின், தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆகியோரும் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழிபெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மாநாட்டின் நிறைவுநாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் புத்தக கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஜுலை 7 முதல் 9ம் தேதி வரை சென்னையில் 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: