25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்: ஆண்டு விழா இலச்சினை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டு பேசும்போது, சென்னையில் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில், கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை (லோகோ) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசியதாவது: பாலர் இல்லமாக இருந்த இந்த இடத்தை தலைவர் கலைஞர் கலைவாணர் அரங்கமாக ஆக்கப்பட்டு, அந்த கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் தமிழின தலைவர் கலைஞரின் நூற்றாண்டு இலச்சினை, அதாவது லோகோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் கோபாலகிருஷ்ண காந்தி வருகை தந்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கை வாரிசான தலைவர் கலைஞரை வாழ்த்துவதற்காக மகாத்மா காந்தியின் பேரன் இங்கே வருகை தந்திருக்கிறார்.

நாங்கள் எப்படி காந்தியடிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோமோ, அதைப்போல பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம் மீது மதிப்பு கொண்டவர் தான் நம்முடைய கோபாலகிருஷ்ணன் காந்தி. திராவிட கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சி துறைமுகம் என்றும் சொன்னார். ‘பெரியாரின் இலட்சிய அரசியலை, அண்ணா, கலைஞர் ஆகியோரின் செல்வாக்கு, ஆட்சி பீடத்தில் அமர்த்தியது’ என்றும் எழுதியவர் கோபாலகிருஷ்ணன் காந்தி. மேலும், ‘அண்ணா, கலைஞர் ஆகியோரின் அரசியல் என்பது ஏழைகளுக்கு ஆதரவான, உழவர்களுக்கு ஆதரவான, சாமானிய மக்களுக்கு ஆதரவான, சாதியத்துக்கு எதிரான, மதவாதத்துக்கு எதிரான கொள்கைகளின் வழியே ஆட்சியதிகாரத்தை அணுகுவது’ என்றும் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியபோது அதனை கோபாலகிருஷ்ணன் காந்தி மனந்திறந்து பாராட்டினார். காந்தியடிகளின் பேரனான அவர் இங்கு வருகை தந்து, கலைஞரையும், எங்களது ஆட்சியையும் பாராட்டி பேசியது எனக்கு வாழ்நாளில் கிடைத்தற்கரிய மாபெரும் பேறு. இந்த பெயரை காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்று கோபாலகிருஷ்ணன் காந்திக்கு நான் உறுதி அளிக்கிறேன். நாளை (இன்று) ஜூன் 3ம் நாள். வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்துக்கு விடிவெள்ளியாய் தோன்றி, வாழும் காலத்தில் ஒளிதரும் உதயசூரியனாக வாழ்ந்து, நிறைந்த பின்பும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிற முத்தமிழறிஞர் கலைஞர் தோன்றிய நாள். கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இலக்கியவாதிகளுக்கு எல்லாம் இலக்கியவாதியாக, கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞராக, அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக, முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வராக திகழ்ந்த தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த இலச்சினையை (லோகோ) வெளியிட்டு இருக்கிறோம். கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் மதுரையில் அமைய இருக்கிறது. சென்னையில் அவரது நூற்றாண்டு நினைவு மருத்துவமனை அமைய இருக்கிறது. அரசின் சார்பில் மாதம்தோறும் மாவட்டம்தோறும் விழாக்களை நடத்த இருக்கிறோம்.

இன்றைய சென்னையிலும், சென்னையை சுற்றி இருக்கக்கூடிய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்தளவுக்கு தொழில் நிறுவனங்கள் உதயமாகியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் ஆட்சி காலம்தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோன்ற தொழில் புரட்சியைத்தான் இன்று நமது திராவிட மாடல் அரசும் உருவாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். ரூ.3,233 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கிறது.

வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்தியாவில் முதலீடு செய்யும்போது நிச்சயமாக தமிழ்நாட்டில்தான் எங்களது நிறுவனங்களை தொடங்குவோம் என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் கலைஞர் போட்டுக் கொடுத்த அடித்தளம்தான்.
சிங்கப்பூர் மக்களிடத்திலே, தமிழர்களிடத்திலே நான் உரையாற்றும்போது தலைவர் கலைஞர் பெயரை சொன்னாலே கைதட்டுகிறார்கள். தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகெங்கும் வாழக்கூடிய தமிழினத்தின் தலைவராக தலைவர் கலைஞர் செயல்பட்டார் என்பதை அவர்கள் பெருமிதத்தோடு சொல்கிறார்கள். அதனால்தான் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடே கொண்டாட இருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.

கலைஞருடைய நூற்றாண்டு விழாக்களை முன்னெடுக்க அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படும், இரண்டொரு நாட்களில் அது வெளியிடப்படும். தலைவர் கலைஞர் என்பவர் தனிப்பட்ட திமுகவின் சொத்து அல்ல; தமிழ்நாட்டின் சொத்து. உலக தமிழர்களின் சொத்து. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான கலைஞரின் நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டி அவருக்கு, அவருடைய புகழுக்கு மேலும் மேலும் புகழ் சேர்க்கும் வகையில், ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். தலைநகர் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான BEST IN CLASS Convention Center-ஆக (பன்னாட்டு அரங்கம்) இது அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்ப கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலக திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ அமைய வேண்டும் என எண்ணுகிறேன். இது, சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம். மிகப்பெரிய பன்னாட்டு அரங்கம் உலகின் பல நாடுகளில் இருப்பதுபோல தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கிறது – அதுவும் கலைஞர் பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். பன்னாட்டு அரங்கம் போன்ற பயன்பாட்டு சின்னங்கள் கலைஞர் புகழை நூற்றாண்டுகள் கடந்தும், உலகமெங்கும் எடுத்துச் செல்லும்.

ஏற்கெனவே, தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் சுமார் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்கால தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனை கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய, உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திர தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மிக பிரம்மாண்டமாக உலக தரத்தில் சென்னையில் அமைக்கப்படும்.

‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ என்பது தமிழ்நாட்டு இளைய சக்தியை, அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும். ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று வரும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களுடைய, இளைஞர்களுடைய அறிவுக்குடியிருப்பாக ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ அமையுமானால் காலமெல்லாம் கலைஞர் வாழ்வார். அதுவே நம்மை ஆளாக்கிய தலைவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான, உண்மையான புகழாக இருக்கும். கலைஞரின் முகம்தான் நமது இலச்சினை. கலைஞரின் கொள்கைகள்தான் நமது இலட்சியங்கள். கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் நமது வாழ்நாள் கடமை என்பதை சொல்லி கலைஞரின் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் கடந்து வாழ்க, வாழ்க, வாழ்க. இவ்வாறு அவர் பேசினார். ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ என்பது தமிழ்நாட்டு இளைய சக்தியை, அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும்.

* ஆளுமை மிக்க தலைவர் கலைஞர்- கோபாலகிருஷ்ண காந்தி
இந்த விழாவில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசும்போது, ஆளுமை மிக்க தலைவர் கலைஞர். இந்திய அரசியலின் ராஜதந்திரி கலைஞர். தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் பெயர் நீடித்திருக்கும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர். எதை எப்போது செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்ற பக்குவம் கொண்டவர் கலைஞர். பொதுச்சொத்துக்களை, அறக்கட்டளையின் சொத்துகளை போன்று காக்க வேண்டும். சிந்தித்துவிட்டு பேசுபவர்கள், பேசிவிட்டு சிந்திப்பவர்கள் என இரண்டு வகையான அரசியல்வாதிகள் உண்டு. ஊழல் என்பது ஒன்றுதான். அதை ஆளுங்கட்சியின் ஊழல், எதிர்க்கட்சியின் ஊழல் என்று பார்க்கக் கூடாது என்றார்.

The post 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்: ஆண்டு விழா இலச்சினை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: