திருச்சி: திருச்சி அருகே ரயில் வரும்போது, தண்டவாளத்தில் லாரி டயரை உருட்டி விட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் 2 நாட்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். 5 நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
இந்நிலையில் வழக்கம்போல் கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயில் நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து 12.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
ரங்கம் ரயில் நிறுத்தம் தாண்டி லால்குடி நோக்கி சென்றபோது நள்ளிரவு 12.50 மணி அளவில் வாளாடி அருகே தண்டவாளத்தின் நடுவே ஒரு லாரி டயர் கிடந்தது. அந்த டயரை ரயில் தாண்டிச்சென்ற போது, மேலும் ஒரு டயர், தண்டவாளத்தின் நடுவில் உருண்டு வந்தது. இந்த டயர் மீதும் ரயில் மோதியது. இதனால் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயிலின் அடிப்பகுதியில் உள்ள பிரேக் இன்ஜின், மின் சாதன பெட்டி ஆகியவற்றில் டயர் மோதி சேதம் ஏற்பட்டதால், இன்ஜினுக்கு அடுத்தடுத்து இருந்த 6 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயிலில் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இன்ஜின் டிரைவர் திருச்சி ரயில்வே நிர்வாகம் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் ரயில்வே தொழில்நுட்ப பொறியாளர்கள் வந்து மின் இணைப்பை சீரமைத்த பின்னர் ரயில் 20 நிமிடம் தாமதமாக நள்ளிரவு 1.10 மணி அளவில் அங்கிருந்து ரயில் சென்னை புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பிரபாகரன் தலைமையிலான ேபாலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் டயரை போட்டதோடு, மேலும் ஒரு டயரை உருட்டி விட்ட மர்ம நபர்கள் யார், அவர்கள் ரயிலை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டார்களா, இதற்கு காரணம் என்ன என்று விசாரணை நடந்து வருகிறது. மேலும் அப்பகுதி தெருக்கள், முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post திருச்சி அருகே பரபரப்பு லாரி டயரை உருட்டி விட்டு ரயிலை கவிழ்க்க சதி: 6 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.