சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்; நிற்க வேண்டிய இடத்தை விமானம் சென்றடைய வழிகாட்டும் கருவிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் ஓடுபாதையில் ஓடி, நிற்கவேண்டிய இடத்தில் நிற்க இதுவரை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது இப்பணிக்காக அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை நிறுத்துவதற்கான ‘பே’ எனும் 95 நடைமேடைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவை விமானங்கள் வந்து, நின்று செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஓடுபாதையில் இறங்கும் விமானங்கள் டாக்சி வே எனும் இணைப்பு சாலைக்கு வந்து அதன்பின் நிற்க வேண்டிய நடைமேடைகளில் வந்து நிற்கும். இதற்காக சென்னை விமானநிலையத்தில் ‘கிரவுண்ட் ஸ்டாப்’ எனும் தரைதள ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் கையில் சிக்னல் பலகைகளை வைத்து, விமானிக்கு சைகை காட்டுவர். அந்த சைகைகளை வைத்து பே நடைமேடை பகுதியில் விமானம் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. எனினும், கடுமையான சூறைக்காற்று, பலத்த மழை போன்ற மோசமான வானிலை நிலவும்போது, தரைதள ஊழியர்கள் காட்டும் சைகைகளை விமானிகள் உணர்ந்து, விமானத்தை கொண்டுவந்து நிறுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை விமானநிலைய ஓடுபாதையில் நேற்று காலை முதல் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. டாக்சி வேயில் இருந்து விமானங்கள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு திரும்பும்போது, 60 மீட்டர் தூரத்தில் இருந்து நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் செயல்படத் துவங்கும். விமானம் நேர்கோட்டில் சரியானபடி, நடைமேடைக்கு வருவதை அந்த தானியங்கி கருவி உறுதி செய்யும். விமானம் நேர்கோட்டில் இருந்து விலகி, வலது அல்லது இடதுபுறம் திரும்பினால், அந்த கருவியில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் அம்புக்குறி இட்டு வழிகாட்டப்படும்.

The post சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்; நிற்க வேண்டிய இடத்தை விமானம் சென்றடைய வழிகாட்டும் கருவிகள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: