புட்லூர் ரயில்நிலையம் அருகே விபத்தில் பலி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி மீண்டும் வீட்டுக்கு வந்ததால் அதிர்ச்சி: வேறொருவரின் உடலை வாங்கி புதைத்தது அம்பலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள்(66). இவருக்கு காந்தி, வெங்கடேசன், சரவணன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காந்தி, வெங்கடேசன் ஆகிய இருவரும் சென்னையிலும் சரவணன் சேலை கண்டிகை கிராமத்திலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொக்கம்மாளுக்கும் எதிர்வீட்டுக்காரர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் அப்போது எதிர் தரப்பினர் அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதறி மூதாட்டி ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் துண்டறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனைக் கண்ட சொக்கம்மாளின் கடைசி மகன் சரவணன், சென்னையில் உள்ள அண்ணனுக்கு தகவல் சொல்ல முயற்சித்துள்ளார். செல்போனை அண்ணன் காந்தி, வெங்கடேசன் என யாரும் எடுக்காததால் இது எங்க அம்மா தான் எனக் கூறி ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து உடலை வாங்கி சேலைகண்டிகை சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (29ம் தேதி) சேலை கண்டிகை கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டிற்கு தாய் சொக்கம்மாள் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் செய்வதறியாது தவித்தார். சம்பவத்தை கேள்விப்பட்டு நான் உயிரோடு தானே இருக்கிறேன் என தாயும் அழுது புலம்பியுள்ளார். இதனையடுத்து தாய் மீண்டும் தனது வீட்டிற்கு வந்ததாக சரவணன் ரயில்வே போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். வேறு ஒருவரது உடலை எனது தாயார் எனக் கூறி நல்லடக்கம் செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனால் திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகனை அணுகி உடலை மாற்றி புதைத்து விட்டோம். அதனை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதே போன்று வேறு யாராவது காணாமல் போய், புகார் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினரிடமும் விசாரிக்க சொல்லியுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி சகுந்தலா(56) என்பவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தாவுத்துக்கான்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 24ம் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகார் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சகுந்தலாவின் உறவினர்கள் முன்னிலையில் துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், விஏஓ மலர்க்கொடி, ரயில்வே இருப்புப்பாதை போலீசார் ஆகியோர் சேலை கண்டிகை சுடுகாட்டில் அடக்கம் செய்த மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்தனர்.

அப்போது சகுந்தலாவின் உடலில் இருந்த மச்சம் மற்றும் கையில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து இது சகுந்தலா தான் என உறுதி செய்தனர். இதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக அவரது தலை முடி ஆகியவற்றை மருத்துவர்கள் கொண்டு சென்றனர். மேலும் சகுந்தலா என்பவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தாவுத்துக்கான் பேட்டை கிராமத்திற்கு உறவினர்களை பார்ப்பதற்காக அடிக்கடி சென்று வருவார். ஆனால் திருவள்ளூருக்கும் புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்தது குறித்து விசாரணை நடைபெறும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post புட்லூர் ரயில்நிலையம் அருகே விபத்தில் பலி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி மீண்டும் வீட்டுக்கு வந்ததால் அதிர்ச்சி: வேறொருவரின் உடலை வாங்கி புதைத்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: