இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

மாதவரம்: கீழ்ப்பாக்கத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி எஸ்எஸ் புரம் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற மஞ்சப்பை (28). இவர் மீது தலைமைச் செயலக காலனி, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் தனது நண்பர்களான பிரகாஷ், கணேசன் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட சிலரோடு சேர்ந்து கடந்த 26ம் கீழ்ப்பாக்கம் வரதம்மாள் தோட்டம் பகுதியில் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில், பிரகாஷ், கணேசன் உள்ளிட்ட சிலர் வெங்கடேஷை கத்தியால் வெட்டினர்.

இதில் அவருக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் அயனாவரம் உதவி கமிஷனரின் தனிப்படை எஸ்ஐ மீனா உள்ளிட்ட போலீசார், பிரகாஷ்(30), கணேஷ் என்ற கேட் கணேசன்(25), கார்த்திக்(21), ரமேஷ் என்ற பரோட்டா சீனி(24), ராஜ் என்ற யுவராஜ்(20) ஆகிய 5 பேரையும் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நம்மாழ்வார் பேட்டை, சாமி பக்தன் தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்(28) என்ற வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது 7க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாணிக்கத்தை கைது செய்த தலைமைச் செயலக காலனி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

The post இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: