ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமன விவகாரம்; தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதியுதவியுடன் இந்தாண்டு 500மின்சார பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு புதிதாக வாங்கப்படும் மாநகர பேருந்துகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்காகன சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. ஆனால் இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார். அப்போது அமைச்சர், ‘’சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’. அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது, ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள்’ என்றார்.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கக் கூடாது. ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஏப்ரலில் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 6ம் தேதிக்கு பிறகு ஸ்டிரைக் நடத்துவோம் என்று தெரிவித்தோம்.

இதுசம்பந்தமாக ஏற்கனவே ஒருமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை கமிஷனர் முன்னிலையில் போக்குவரத்து கழக நிர்வாகமும் நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். மற்ற தொழிற்சங்கத்தினர் வந்தாலும் ஆட்சேபணை இல்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்திக்க உள்ளோம்.இவ்வாறு கூறினர்.

The post ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமன விவகாரம்; தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: