சென்னையில் புதிதாக திருப்பதி தேவஸ்தான கோயிலை கட்ட முடிவு: ஏ.ஜே.சேகர் தகவல்

சென்னை: சென்னையில் புதிதாக திருப்பதி தேவஸ்தான கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாகவும், கோயில் கட்ட இடம் வாங்க நன்கொடை வழங்குமாறு ஏ.ஜே.சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் புனரமைப்பு பணிகள் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் ஏ.ஜே.சேகர், ஐசரி.கணேஷ், ஏ.சி சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுவின் தலைவர் ஏ.ஜே.சேகர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த தாயார் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 14ம் தேதி நடைபெற்றது. தினமும் பத்தாயிரம் பேர் வரை அந்த கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலையும் தாயார் கோவில் போல் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துள்ளனர். அதற்கு போதுமான இடம் இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது, இதற்காக பக்கத்தில் இருந்து மூன்று கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளோம். அதன் மதிப்பு ரூ.14 கோடி. மேலும் பக்தர்களிடம் நன்கொடை கேட்கப்பட்டது.

தலைவர் என்ற முறையில் நான் ஒரு கோடி ரூபாயும், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த கோபால் சீனிவாசன் , கே.எஸ்.ஜெயராமன் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், சமீரா பவுண்டேஷன், அனுகிரகா பவுண்டேஷன் ஆகியோர் ஒரு கோடி ரூபாயும், ஐசரி கணேஷ் ரூ.50 லட்சம் என மொத்தம் 7 கோடியே 60 லட்சம் இதுவரை வந்துள்ளது, இந்த கோயிலை புதுப்பிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த இடத்தில் மொத்தமாக புதிய கோயில் கட்டப்பட உள்ளது. தாயார் கோயில் சிமெண்ட் மூலம் கட்டப்பட்டது ஆனால் இந்த கோயில் சிமெண்ட் இல்லாமல் முழுவதுமாக கற்களால் கட்டப்பட உள்ளது. கோயில் கட்டப்படும் செலவை முழுவதும் தேவஸ்தானம் பார்த்துக்கொள்ளும். இடம் வாங்க தான் நன்கொடை வாங்கப்படுகிறது. தனிநபர் பெயரில் நன்கொடை வாங்குவது கிடையாது தேவஸ்தான பெயரில் தான் நன்கொடை வாங்கப் பெறுகிறது, பூமி பூஜை இன்னும் ஆறு மாதத்தில் நடத்தப்படும்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்ய முடியாததால் தற்போது புதிய கோயில் கட்டப்படுவதாகவும், மேலும் ஏழைகளுக்கு திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது என்றும் கோயிலில் தினமும் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான இட வசதி இல்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். தினமும் பத்தாயிரம் பேர் வந்தாலும் அன்னதானம் வழங்க தேவஸ்தானம் தயாராக உள்ளது.

தேவஸ்தானத்திற்கு தமிழக அரசிடம் உதவி கேட்க வேண்டியது இல்லை. தேவஸ்தானத்திலும் நிறைய பணம் உள்ளது, மற்ற வசதிகளை தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு செய்து தருகிறது. மொத்தம் 11 கிரவுண்ட் இடம் வரவுள்ளது, அருகில் வேறு ஏதேனும் இடம் இருந்தாலும் அதை வாங்க தயாராக உள்ளோம். பக்கத்தில் தாயார் கோயில் 6 கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டது. அதில் அனைத்து வசதிகளும் உள்ளது, புதிய கோயிலில் கீழே கல்யாண மண்டபம் உள்ளிட்டவைகள் வருவதால் அதைக் கட்ட ரூ.50 கோடி செலவாகும். புதிய கோயில் கட்டப்பட்டாலும் பக்தர்கள் சாமி பார்க்க வேண்டும் என்று இருப்பார்கள். ஆனால் அதற்கும் புதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

The post சென்னையில் புதிதாக திருப்பதி தேவஸ்தான கோயிலை கட்ட முடிவு: ஏ.ஜே.சேகர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: