பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெள்ளாரை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: வெள்ளாரை கிராமத்தில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெருமந்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சி வெள்ளாரை கிராமத்தில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கொளத்தூர், வெள்ளாரை, குண்டு பெரும்பேடு, சேத்துப்பட்டு, மலைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான குடிமகன்கள், பைக்கில் வெள்ளாரை டாஸ்மாக் கடைக்கு வந்து மதுபானம் வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது, டாஸ்மாக் கடையை சுற்றி திறந்தவெளியாக உள்ளது. இதனால் மது குடிப்பவர்கள், ஆங்காங்கே உட்கார்ந்து குடிக்கின்றனர். இதனால், வயல்வெளிக்கு செல்லும் பெண்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்லும் குடிமகன்கள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், வெள்ளாரை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெள்ளாரை அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. ஓரிரு மாதங்களில் வெள்ளாரை டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளேம். எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’ என்றார்.

The post பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெள்ளாரை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: