சுருளிப்பட்டி அருகே தோட்டத்தில் முகாம்; அரிசிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரம்: கம்பம், கே.கே.பட்டி, சுருளி அருவியில் 144 தடை

கம்பம்: கம்பத்தில் கதிகலக்கிய அரிசிக் கொம்பன் யானை இன்று காலை சுருளிப்பட்டி அருகே, கூத்தனாட்சி கோயில் பகுதியில் உள்ள தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் மூணாறு, சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பன் காட்டுயானையை கடந்த ஏப்.30ம் ேததி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி ெசலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர்.

அங்கிருந்த அரிசிக்கொம்பன், திருவில்லிபுத்தூர், மேகமலை, குமுளி வனப்பகுதிகளைக் கடந்து திடீரென நேற்று முன்தினம் காலை தேனி மாவட்டம், கம்பம் நகரில் உள்ள மின்வாரிய அலுவலக பகுதிக்கு வந்தது. அங்கு தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். ஆட்டோவை தள்ளி சேதப்படுத்தியது. டூவீலரில் வந்தவரை தாக்கியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கம்பம் நகராட்சியினர், போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி கம்பத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வெளிநபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு கம்பம் அருகே ஆங்கூர்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் நுழைந்த அரிசிக்கொம்பன் நள்ளிரவு சுருளிப்பட்டி கிராமத்தில் புகுந்தது. சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் உள்ள பலா மரத்தில் பழங்களை ருசித்த பின் அருகில் இருந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கேட்டை உடைத்து பழைய சுருளி அருவி சாலை வழியாக சென்றுள்ளது. ரேடியோ காலரிலிருந்து சிக்னல் கிடைக்காததால் யானையின் இருப்பிடத்தை தற்போது சரியாக கணிக்க முடியவில்லை. எனினும் தற்போது கூத்தனாட்சி ஆறு, சரளிமேடு பகுதியில் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் பழைய சுருளி அருவிச்சாலை, மெயின் சுருளி அருவிச்சாலையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், சுருளி அருவிக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில், சுருளிப்பட்டி அருகே கூத்தனாட்சி கோயில் பகுதியில் தனியார் தோட்டத்தில் அரிசிக்கொம்பன் முகாமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளனர். இதையொட்டி கம்பம், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று கும்கிகள் வருகை: அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியிலிருந்து 2 கும்கி யானைகள் வருவதாக நேற்று முன்தினம் இரவு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். நேற்று அதிகாலை பொள்ளாச்சியிலிருந்து சுயம்பு, முத்து என்ற 2 கும்கி யானைகள் கம்பத்திற்கு வந்தன. தொடர்ந்து டாப் ஸ்லிப்பிலிருந்து உதயா என்ற கும்கி யானையும் கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கும்கி யானைகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இந்த கும்கி யானைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு, யானையை மடக்கும் பணிகள் குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், தேனி கலெக்டர் ஷஜீவனா, எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே உடனிருந்தனர்.

The post சுருளிப்பட்டி அருகே தோட்டத்தில் முகாம்; அரிசிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை தீவிரம்: கம்பம், கே.கே.பட்டி, சுருளி அருவியில் 144 தடை appeared first on Dinakaran.

Related Stories: