சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே தன் சூரிய கதிரின் கட்டுக்குள் இந்த கோடை காலம் முழுதும் சூரியன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த கோடை வெயில் இந்தியாவில் அனைத்து பகுதியிலுமே குழந்தைகள், நடுத்தர வயதினர், வயதானவர் என மூன்று வயதினரையும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது.

கோடை காலம் வருவதால், வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது முக்கியம். கோடையில் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில குறிப்புகளை நாம் இந்த காலம் முடியும் வரை பின்பற்ற வேண்டும்.

ஜன்னல்களை பாதுகாக்கவும்: வீட்டின் வெப்பத்தில் சுமார் 40% ஜன்னல்கள் வழியாக வருகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும் ஜன்னல்கள். காரணம், காலை சூரியன் கிழக்கில் தான் உதிக்கும்.

அந்த நேரம் முதல் உச்சி வெயில் வரை கிழக்கு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல் மாலை சூரியன் மறையும் திசை மேற்கு. சூரியன் மறைந்த பிறகும் அதன் தாக்கம் அந்த பகுதியில் இருக்கும். இதைத் தடுக்க திரைச்சீலைகள், மூங்கிலாலான தடுப்புகள், தனி வீடாக இருந்தால், அந்த ஜன்னல் பக்கத்தில் வேப்பமரத்தினை நடலாம். இது வெயிலின் தாக்கம் முழுமையாக வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும்.

உணவு: உங்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உணவு மிகவும் அவசியம். இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக காரமான மற்றும் மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. காளான்கள், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்ச், தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி போன்ற பழங்களை சாப்பிடலாம். பழையது, கேழ்வரகு கூழ்… இவையும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். புதினா உடலை குளுமையாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், வெயிலினால் ஏற்படும் சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை தூண்டும்.

தண்ணீர்: கோடை காலத்தில் குடிநீரின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஏனெனில் நிறைய தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வியர்வையுடன் குறைந்துவிடும். எனவே, ஒரு நாளில் குறைந்தது 2.5 லிட்டரைக் குடிக்கவும். சோர்வு அல்லது குறைந்த ஆற்றல் அளவுகளில் இருந்து விடுபட தண்ணீர் உங்களுக்கு உதவும். சிலருக்கு வெயிலில் சுற்றும் வேலை இருக்கும். அவர்கள் கையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீரை கொண்டு செல்வது நல்லது. காரணம், கோடையினால் ஏற்படும் பாதிப்பு முதலில் உங்களை டீஹைட்ரேட் செய்து, மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். அதனால் நா வறண்டு இருப்பது போல் தோன்றும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் உங்கள் உடலில் வியர்வையால் இழந்த நீர்சத்தினை சம அளவில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

திரவ உட்கொள்ளலை அதிகரிக்க

*உணவுடன் ஒரு பானத்தை சாப்பிடுங்கள். அது பழச்சாறு, இளநீர், எலுமிச்சை சாறாக இருக்கலாம். செயற்கை பானங்களை தவிர்ப்பது நல்லது.

*முலாம்பழம், வெள்ளரி, தக்காளி, பீர்க்கங்காய், சுரக்காய், முள்ளங்கி, நூல்கோல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள். அவை நீரேற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல், நிறைய நார்ச்சத்தும் அளிக்கும்.

*எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.

*உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது.

*வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும்.

உடலின் முக்கிய வெப்பநிலை சென்சார் நம் கழுத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது. ஒரு விசிறியின் அருகே உட்காரப் போகிறீர்கள் என்றால், அது உங்கள் கழுத்தின் பின்புறத்தில் வீசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குளிர்ச்சியாக உணர உதவும்.

ஆடை: இலகுரக, தளர்வான ஆடைகள் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஷார்ட்ஸ் மற்றும் ஷார்ட் ஸ்லீவ் ஷர்ட்கள் நல்ல தேர்வாகும். இது வெளிர் நிறத்தில் இருந்தால், அது இன்னும் சிறந்தது. ஏனெனில் இது வெப்பத்தையும் சூரிய ஒளியையும் சிறப்பாக பிரதிபலிக்கும். மற்ற இயற்கை இழைகளை விட பருத்தி ஆடைகளை அதிகம் பயன்படுத்தலாம். இது உடலில் வியர்வையினால் ஏற்படும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும்.

வெட்ட வெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

தொகுப்பு: பிரியா மோகன்

The post சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க appeared first on Dinakaran.

Related Stories: