மாத இறுதியை எட்டிய போதும் ஊட்டியில் களை கட்டிய விற்பனை: மகிழ்ச்சியில் திளைத்த வியாபாரிகள்

ஊட்டி: மாத இறுதியை எட்டிய போதிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வருகை குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டிக்கு கோடை சீசனின் போது வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை நம்பி ெதாழில் செய்யும் ஊட்டி வியாபாரிகளுக்கு இவ்விரு மாதங்கள் போனஸ் மாதங்கள். மற்ற மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படும். கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், இந்த வியாபாரிகளுக்கு ஓரளவு விற்பனையாகியது. மாத இறுதி வாரம் என்பதால் தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

இதனால், மே மாதம் இறுதி வாரத்தில் சுற்றுலா பயணிகள் சற்று கூட்டம் குறைவாக காணப்படும். ஆனால், பள்ளிகள் ஜூன் மாதம் 7ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். கடந்த வாரம் மலர் கண்காட்சி முடிந்த பின்னும், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நேற்றும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

பொதுவாக மே மாதம் கடைசி வாரத்தில் படிப்படியாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். ஆனால், இம்முறை பள்ளிகளுக்கு விடுமுறை நீடிப்பால், இன்னும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் உள்ளதால், தற்போதும் ஊட்டியில் உள்ள சில முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. அதேபோல, சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

The post மாத இறுதியை எட்டிய போதும் ஊட்டியில் களை கட்டிய விற்பனை: மகிழ்ச்சியில் திளைத்த வியாபாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: