சேலம் மாநகரில் 15 கடைகளில் சோதனை கெட்டுபோன 64 கிலோ இறைச்சி பறிமுதல்-உரிமம் பெறாத 3 கடைகளுக்கு சீல்

சேலம் : சேலம் மாநகரில் 15 இறைச்சி கடைகளில் நடத்திய ஆய்வில், சுகாதாரமற்ற நிலையில் இருந்த கெட்டு போன 64 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சேலம் மாநகர பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆடு, கோழி இறைச்சி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்வந்தது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள், நேற்று சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிகளில் உள்ள 15 இறைச்சி கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுகாதாரமற்ற முறையிலும், குளிர்சாதன பெட்டியிலும் வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி என மொத்தம் 64 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் கடையின் முன் தொங்க விட கூடாது. துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமான முறையில் தொங்க விட வேண்டும். பணியாளர்கள் கையுறை, தலையுறை ஏப்ரான் அணிந்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற சீட்டுகொண்டு கவர் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றனர்.

The post சேலம் மாநகரில் 15 கடைகளில் சோதனை கெட்டுபோன 64 கிலோ இறைச்சி பறிமுதல்-உரிமம் பெறாத 3 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: