வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு தேர்வை ஒத்திவைத்து அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 20, 21ம் தேதிகளில் நடத்தவிருக்கும் வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க எம்.எஸ்சி (வேளாண் விரிவாக்கம்), எம்.எஸ்சி (வேளாண் பொருளாதாரம்) ஆகிய படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு தோட்டக்கலையில் அனைத்து வகையான எம்.எஸ்சி படிப்பை படித்தவர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு மட்டும் இருவகை பட்டங்களைத் தவிர மற்ற வேளாண் முது அறிவியல் பட்டதாரிகள் அனுமதிக்கப்படாதது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிர்ணயித்த தவறான கல்வித் தகுதியால் பாதிக்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நீதி வழங்கும் வகையில், வரும் 20, 21ம் தேதிகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள 3 பணிகளுக்கான தேர்வுகளில், வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வை மட்டும் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: