உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு நினைவு தினம்

வேதாரண்யம்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கடற்கரைகளில் உப்பு அள்ள அன்றைய ஆட்சியாளர்கள் வரி விதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1930ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது. இதன் பின்னர் அங்கு ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் பிள்ளை உள்ளிட்ட குழுவினர் உப்பு அள்ளி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அறைகூவல் விடுத்தனர்.

இதன் நினைவாக அகஸ்தியன்பள்ளியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காந்தியவாதிகள், காங்கிரசார் திருச்சியில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்டு சென்று வேதாரண்யத்தில் உப்பு அள்ளி வருகின்றனர். அதன்படி 93ம் ஆண்டு உப்பு சத்தியா கிரக நினைவு தினத்தையொட்டி, உப்பு சத்தியாக்கிரக பாதயாத்திரை குழுவினர் கடந்த 14ம் தேதி திருச்சி ராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் வந்தடைந்தனர்.

நேற்று வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் மயிலாடுதுறை எம்பி பி.வி.ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடியும் உபவாசம் மேற்கொண்டனர்.
அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் வேதாரண்யம் உப்புசத்திய கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலமாக 3 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.

The post உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு நினைவு தினம் appeared first on Dinakaran.

Related Stories: