மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா; மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்: திருக்கல்யாணத்துக்கு தயாராகும் பிரமாண்ட பந்தல்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில், நாளை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. வரும் 2ம் தேதி நடக்கும் திருக்கல்யாணத்துக்காக பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று காலை 8 மணிக்கு அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இரவு 7 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுவாமி அதிகார நத்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். நாளை (ஏப்.30) காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கில் மேலமாசி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கட்டுச் செட்டி மண்டபம் செல்கின்றனர்.

இரவு 7.05 முதல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மீனாட்சியம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிப்பார். பின்னர் தங்கம், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருள்வர். மே1 ம் தேதி திக்விஜயம், மே 2ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்காக ஆடி வீதியில் உள்ள திருமண மண்டபம் பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. திருமணத்தை காண வரும் 12 ஆயிரம் பக்தர்களுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெளியே இருந்தும் பக்தர்கள் திருமணத்தை காண வசதியாக சித்திரை வீதிகளில் பெரிய டிவி திரைகள் பொருத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி காலை 5.15 மணி முதல் 5.45 மணிக்குள் 4 மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறள்ளது. இதற்கிடையே மே 3ம் தேதி அழகர் மலையில் இருந்து அழகர் புறப்படுகிறார். மே 4ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவை, மே 5ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதனால், மதுரை சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது.

The post மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா; மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்: திருக்கல்யாணத்துக்கு தயாராகும் பிரமாண்ட பந்தல் appeared first on Dinakaran.

Related Stories: