இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் யாகசாலையுடன் துவங்கிய விழாவில் நேற்று காலை ஆனந்தவல்லி சோமநாதர் பிரியாவிடை ஆகியோருக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. புதிதாக தயார் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட கொடியை சோமநாதர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கோயில் குருக்கள் ராஜேஷ்பட்டர், பரத்வாஜ்பட்டர், குமார்பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியர்கள் ஏற்றி வைத்தனர்.
பால், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 9 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதன்பின் கொடிமரத்தின் அருகில் இருந்த ஆனந்தவல்லி சோமநாதர்பிரியாவிடை உற்சவர்களுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்றத்தின் போது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, சிவகங்கை தேவஸ்தானம் மானாமதுரை சரக கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன், சித்திரை திருவிழா பத்து நாள் மண்டகப்படிதாரர்கள், மின்சாரவாரியம், வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர கலந்துகொண்டனர்.
The post மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.