உச்ச நீதிமன்ற தடையை மீறி அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த விவகாரத்தில், அம்மாநில முதல்வர் மம்தாவின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியிடமும் விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து அபிஷேக் பானர்ஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவு நேற்று காலை 11.15 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 1.45 மணி அளவில் அபிஷேக் பானர்ஜி விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு என அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘பாஜவால் நான் குறிவைக்கப்பட்டுள்ளேன், துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். சிபிஐயின் சம்மன் நீதிமன்ற அவமதிப்பாகும். இது மோசமான நிலைமை’’ என கண்டித்துள்ளார். இந்த சம்மன் நேற்று முன்தினம் தயாரிக்கப்பட்டு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்ற தடையை மீறி அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ appeared first on Dinakaran.

Related Stories: