சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த வேண்டும்: ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தமிழக அரசு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மற்றும் கதர், கிராம தொழில் வாரியம் பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது: முதல்வரின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டினை 2021-2022ம் கல்வியாண்டில் இருந்து வழங்க, ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளது. 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை ஒன்றிய அரசு 2006ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததில் அன்றைய முதல்வர் கலைஞர் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது \\”வளமானபிரிவினரை\\” நீக்கம் செய்யும் கொள்கையை இந்த அரசு எப்போதும் எதிர்த்து வருகிறது. பொருளாதார நிலையை அளவுகோலாக கருதாமல், சமூகநிலையை மட்டும் கருதி, வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்திட தமிழக அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். பிற்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மக்கள் தொகைகேற்ப இடஒதுக்கீடு விழுக்காட்டை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநில அரசுகளுக்கே இருக்க வேண்டும் என்பதற்கேற்ப இந்திய அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த வேண்டும்: ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: