நீதிபதி நாக்கை துண்டிப்போம் என பேச்சு நீதித்துறையை மிரட்டுவது காங்கிரசுக்கு புதிதல்ல: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து

புதுடெல்லி: நீதிபதி நாக்கை துண்டிப்போம் என பேசியது குறித்து கருத்து தெரிவித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,’ நீதித்துறையை மிரட்டுவது காங்கிரசுக்கு புதியதல்ல” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கட்சி சார்பில் கடந்த 6ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மணிகண்டன், ‘நாங்கள் எப்போது ஆட்சிக்கு வருகிறோமோ, அப்போது, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்பும் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நாக்கை துண்டிப்போம்’ என மிரட்டும் வகையில் பேசினார். இதுபற்றி ஒன்றிய சட்ட துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘நீதி துறையை காங்கிரஸ் கட்சி அச்சுறுத்துவது ஒன்றும் முதன்முறையாக நடக்கும் ஒன்று இல்லை. நெருக்கடி காலத்திற்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியினர் நீதி துறையை தாக்கி உள்ளனர். தற்போதும் அவர்கள் இதனை செய்கின்றனர் ’ என்று தெரிவித்தார்.

The post நீதிபதி நாக்கை துண்டிப்போம் என பேச்சு நீதித்துறையை மிரட்டுவது காங்கிரசுக்கு புதிதல்ல: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து appeared first on Dinakaran.

Related Stories: