தமிழ்நாட்டில் ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். அதன்படி, கடந்த மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகளில் மற்ற வகுப்புகள் அரைநாள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து அரசு , அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 1-3 வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 17 முதல் 21-ம் தேதிவரை இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 10 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28க்குள் இறுதித்தேர்வு நடத்த வேண்டும்.

ஏற்கனவே 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: