×

பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் வெட்டி மிரட்டல்

புதுச்சேரி, மார்ச் 28: லாஸ்பேட்டையில் பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பாலம்பாக்கம், லைன் வீதியைச்  சேர்ந்தவர் தனுசு (36). இவர் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி கவுரி (32). தம்பதியிடையே ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக சில  ஆண்டுகளாக கவுரி தனது மகளுடன், லாஸ்பேட்டை,  புதுப்பேட்டை, நடுத் தெருவில் தனியாக வசித்து வருகிறார். ஏற்கனவே கணவர்  தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போலீசில் முறையிட்டிருந்த நிலையில்,  தற்போது விவகாரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

  சம்பவத்தன்று கவுரியின் வீட்டிற்கு சென்ற தனுசு, அவரை ஆபாசமாக பேசி காய்கறி  வெட்டுவதற்கு அங்கு கிடந்த கத்தியை எடுத்து கை, காலில் கிழித்தாராம். இதை  தடுக்கவந்த அவரது தம்பியையும் தனுசு கத்தியால் தாக்கியதோடு கொலை மிரட்டல்  விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  காயமடைந்த கவுரியும்,  அவரது தம்பியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து  லாஸ்பேட்டை போலீசில் கவுரி புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்ஐ அனுஷா பாஷா  தலைமையிலான போலீசார், தனுசு மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3  பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருத தனுசுவை  கைது செய்த  போலீசார், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில்  அடைத்தனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்