×

நகராட்சி அதிகாரியை தாக்கிய வழக்கில் விழுப்புரம் இன்ஸ்பெக்டரின் பதவி உயர்வுக்கு தடை

 சம்பளத்தில் பிடித்தம் செய்து ₹5 லட்சம் இழப்பீடு  ஆணைய உத்தரவையடுத்து அரசாணை வெளியீடு

விழுப்புரம், மார்ச் 24: விழுப்புரம் சாலாமேடைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்நாராயணன். இவர் கடந்த 2008ல் விழுப்புரம் நகராட்சியில் பொறியியல் பிரிவில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அப்போது, ஊழியர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில் அப்போதைய நகர எஸ்ஐ குமார், ஜெயப்பிரகாஷ் நாராயணனை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முன்விரோதம் இருந்த வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 2008 நவம்பர் 23ம் தேதி அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ராமலிங்கத்தை தாக்கியதாகக்கூறி ஜெயப்பிரகாஷ்நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து, அன்று இரவே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சஸ்பெண்டுக்கும் உள்ளானார். இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் நாராயணன், எஸ்ஐ குமார் மற்றும் போலீசார் மீது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2009ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற ஆவணங்களை ஆதாரமாக கொண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏட்டு ராமலிங்கம், அப்போதைய இன்ஸ்பெக்டர் மணி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கை விசாரித்த ஆணையம் கடந்த 2019ல் தீர்ப்பு வழங்கியது.

அதில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை, எஸ்ஐ குமார், இன்ஸ்பெக்டர் மணியின் சம்பளத்திலிருந்து தலா ரூ.2 லட்சமும், ஏட்டு ராமலிங்கத்திடமிருந்து ரூ.1 லட்சத்தை பெற்று வழங்கிடவும், எஸ்ஐ குமார் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாதென்று டிஜிபிக்கு உத்தரவிட்டும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு விசாரணையின்போதே இன்ஸ்பெக்டர் மணி, ஏட்டு ராமலிங்கம் ஓய்வுபெற்றுவிட்டனர். குமார் மட்டும் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, மனிதஉரிமைகள் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத்ெதாடர்ந்து, தமிழ்நாடு உள்துறை அலுவலகம் அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், விழுப்புரம் எஸ்பி மற்றும் தமிழ்நாடு அரசு கருவூலகணக்குத்துறை அலுவலர்களுக்கு நகல் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஜெயப்பிரகாஷ்நாராயணன் தற்போது ஆரணி நகராட்சி பொறியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Vilapuram Inspector ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது