கடலூர், மார்ச் 23: நீர்நிலை பகுதிகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து மாவட்டத்தில் 683 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 51 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் நீர் நிலைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். கடலூர் கோண்டூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் வேலவன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் கங்கா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில் கடலூர் மாநகரின் புறநகர் பகுதியாக உள்ள கோண்டூர் ஊராட்சியில் பல்வேறு நகர் பகுதி அமைந்துள்ள நிலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் குடிநீர் தடை இன்றி கிடைப்பதற்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம சபை கூட்டத்தில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி நீர்நிலை மற்றும் வடிகால் வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்று கடலூர் ஒன்றியத்தில் திருவந்திபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பவானி நாராயணன் தலைமையிலும், எம்பி அகரத்தில் ஞானபிரகாசம் தலைமையிலும், செல்லஞ்சேரியில் செல்வராஜ் தலைமையிலும், புதுக்கடை ஊராட்சியில் தலைவர் கனகராஜ் தலைமையிலும், காரணப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வரகால்பட்டில் மனோகர் தலைமையிலும் என 51 கடலூர் ஒன்றிய பகுதி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.