×

அரசு மருத்துவமனை, காளைமாட்டு சிலை சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி 30 சதவீதம் நிறைவு

ஈரோடு, மார்ச் 21:  ஈரோட்டில் அரசு மருத்துவமனை, காளைமாட்டு சிலை சந்திப்புகளில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், முடிவுற்ற திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாநகராட்சியில் சாலை மேம்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி, நவீன சாலை அமைக்கும் பணி, சாலை விரிவாக்கம் செய்து மழை நீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைமேடை அமைக்கும் பணி போன்ற திட்டப்பணிகள் ஈரோடு காவேரி சாலை-ஆர்.கே.வி. சாலை, மூலப்பாளையம்- பூந்துறை சாலை, ஈ.வி.என்.சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காந்திஜி சாலை, ஆட்சியர் அலுவலகம் - குமலன்குட்டை செல்லும் பெருந்துறை சாலை போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

மேலும், தற்போது, மாநகராட்சி மாடல் சிட்டி என்ற புதிய திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பிலும், காளைமாட்டு சிலை சந்திப்பிலும் தலா ரூ.30 லட்சம் என ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியிலும், காளைமாட்டு சிலை பகுதியிலும் ஏற்கனவே இருந்த ரவுண்டானாக்களை இடித்து அப்புறப்படுத்தி, விரிவுப்படுத்திய புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, இப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியின் சார்பில் மாடல் சிட்டி திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு, காளைமாட்டு சிலை சந்திப்பில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது, முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. ரவுண்டானாக்களை விரிவுப்படுத்திட முறையாக ஆய்வு செய்து, அதற்கேற்றார் போல அமைத்துள்ளோம். அரசு சார்பில் நெடுஞ்சாலை துறை மூலம் ரவுண்டானா மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முறையான நடைபாதை, போக்குவரத்து சிக்னல்கள், மழைநீர் வடிகால் போன்றவை கட்டமைக்கப்படும். அதைத்தொடர்ந்து 3ல் 1 பங்கு தனியார் விளம்பரத்துடன் நீர்வீழ்ச்சி, நினைவு சின்னம், அலங்கார விளக்குகள் அமைத்து பராமரிக்கப்படும். அரசு மருத்துவமனை ரவுண்டானாவும், காளைமாட்டு சிலை ரவுண்டானா நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது.

இதனால், காளைமாட்டு சிலை ரவுண்டானா பகுதியில் ஏற்கனவே உள்ளதை போல புதிய காளைமாட்டு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் என்ன மாதிரியான நினைவு சின்னம் அமைக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். அதன்பின் ரவுண்டானா பணிகள் முழுமையாக நிறைவு பெறும். இந்த பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும். இதேபோல், திண்டல் ரிங் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்ட ரவுண்டானா 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேட்டுக்கடை பகுதியில் அமைக்கப்பட்ட ரவுண்டானா நிலப்பிரச்சனை காரணமாக இறுதிகட்டத்தில் நிற்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Govt ,Hospital ,Kalaimatu ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...