×

குடிநீர் வினியோகம் பாதிப்பு சோலாரில் ரூ.63.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு, மார்ச் 20: ஈரோடு சோலாரில் 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.50 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக தற்போதுள்ள ஒருங்கிணைந்த மத்திய பஸ் ஸ்டாண்டில் வெளியூர்,டவுன், மினி பஸ்கள் என தனித்தனியாக நிறுத்தப்பட்டு வருகின்றது. மாநகர பகுதிகள் விரிவாக்கம்,போக்குவரத்து நெரிசல், எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தற்போதுள்ள ஈரோடு பஸ் ஸ்டாண்டு தவிர புறநகர் பகுதிகளில் 2 பஸ் ஸ்டாண்டுகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

பல ஆண்டுகளாக புறநகர் பகுதியில் பஸ் ஸ்டாண்டு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பல்வேறு காரணங்களால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், ஆட்சி அமைந்ததும், தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் கரூர் சாலையில், ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியிலும், வட மாவட்டங்களை இணைக்கும் வகையில் சத்தி சாலையில் சூளை அடுத்துள்ள கனிராவுத்தர்குளம் என்ற இடத்திலும் 2 பஸ் ஸ்டாண்டுகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் முதல்கட்டமாக சோலாரில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுவதற்காக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.63 கோடியே 50 லட்சம் மதிப்பில் இந்த புதிய பஸ் ஸ்டாண்டு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில் தரைதளமானது 7 ஆயிரத்து 746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4 ஆயிரத்து 260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை 5 ஆயிரத்து 378 சதுரமீட்டரிலும் அமைக்கப்பட உள்ளது. சுழற்சி பகுதியானது 3,317 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. இந்த புதிய பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் 63 பஸ்கள் நிறுத்தலாம்.

இது தவிர பஸ் ஸ்டாண்டில் 134 கடைகள், 800க்கும் மேற்பட்ட டூ வீலர்கள் நிறுத்தும் வகையில் டூ வீலர் ஸ்டாண்டு, ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான இடவசதி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தவிர டைம் கீப்பர் அறை, பஸ் பயணச்சீட்டு முன்பதிவு அறை, கழிப்பறைகள், வெளிமாவட்ட பயணிகள் அமர்வதற்காக தனி அறை என பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்டு வளாகம் கட்டப்பட்டு வருகின்றது. தற்போது வரை கட்டுமான பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தாண்டுக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பஸ் ஸ்டாண்டு பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பஸ்கள் அனைத்தும் அங்கே நிறுத்தப்படும். இதனால் ஈரோடு மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்பதோடு ஈரோடு மாநகர பகுதியான விரிவாக்கமடையவும் வாய்ப்பாக இருக்கும்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது