9,432 ஏக்கர் பாசன பெற குப்பநத்தம் அணையில் இருந்து நீர் திறப்பு: தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது

செங்கம், மார்ச் 19: குப்பநத்தம் அணையில் இருந்து 9432 ஏக்கர் பாசனத்திற்காக குப்பநத்தம் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கப்பட்டது. 61 நாட்களுக்கு பிறகு திறப்பு தேதி நீடிக்கப்படாது, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசி உள்ளார். 577.80 மில்லி கன அடி தண்ணீரை 61 நாட்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு ஸ்விட்ச் ஆன் செய்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து கு.பிச்சாண்டி, அண்ணாதுரை, கிரி கலசப்பாக்கம், சரவணன் ஆகியோர் மலர் தூவி பாசன நீரை வரவேற்றனர். அதன்பின், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஜவ்வாதுமலை அடிவாரப்பகுதி குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.05. அடி ஆகும். நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவு 700 மில்லி கன அடி. தற்போது அணையில் 593.08 அடி நீர் இருப்பு ஆகும். பாசனத்திற்காக 47 ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு 110 கன அடி வீதம் 18.5.2023 காலை 10 மணி வரை 61 நாட்களுக்கு 577.80 மில்லி கன அடி தண்ணீர் திறந்து விடுகிறது. இதன்மூலம் 9,432.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே தண்ணீரை சிக்கனமாக வீணாக்காமல் பாதுகாத்து பாசனத்தில் பயன்பெற வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், குப்பநத்தம் அணை உதவி பொறியாளர் ஹரிகரன், தாசில்தார் முனுசாமி, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமஜெயம், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: