குடியாத்தம், மார்ச் 19: குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 2 அரை சவரன் தங்க ஜெயின் பறித்த மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி கண்ணம்மா(65) மூதாட்டி. இவர் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து டவுன் பஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சை பெற்று இரவு மீண்டும் பஸ்சில் வீடு திரும்புவதற்காக குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்காக காத்துக் கிடந்துள்ளார்.அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மூதாட்டி கண்ணம்மாவிடம் தாங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின் நன்றாக உள்ளது.
கழட்டிக் கொடுங்கள் அதேபோல் வேறொரு செயின் நான் வாங்க வேண்டும் என்று இதன் டிசைனை பார்த்துவிட்டு மீண்டும் கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். இதில் கண்ணம்மா அவரது கழுத்தில் இருந்த 2அரை சவரன் தங்க செயினை கழட்டி மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் தலைமறைவு ஆகிவிட்டார். பின்னர் மூதாட்டி கண்ணம்மா கூச்சலிட்டதும், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது.