அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் விமரிசையாக நடந்தது கார்த்திைக தீபத்திருவிழா தொடக்கமாக

திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் ெதாடக்கமாக, பந்தக்கால் முகூர்த்தம் நேற்று விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீபத்திருவிழாவை ஆண்டுதோறும் தரிசிக்கின்றனர். அதன்படி, இந்தாண்டு தீபத்திருவிழா வரும் நவம்பர் 27ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, டிசமபர் 6ம் தேதி மகா தீபப்பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று காலை 6 மணியளவில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பந்தக்கால் முகூர்த்தத்தை நிறைவேற்றினர். முன்னதாக, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேலும், திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. விழாவில், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், இரா.ஜீவானந்தம், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் துரை.வெங்கட், அரசு வக்கீல்கள் ந.பழனி, அ.அருள்குமரன், மத்திய கூட்டுறவு வங்கி சட்ட ஆலோசகர் ஆர்.கார்த்திகேயன், நகராட்சி கவுன்சிலர் மெட்ராஸ் சுப்பிரமணியன், இல.குணசேகரன், டிஸ்கோ குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது. பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, கோயில் கோபுரங்களில் இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணி நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால், கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும் சுவாமி மாட வீதி வலம், தேர் திருவிழா போன்றவையும் நடைபெறவில்லை. தற்போது, கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், வழக்கமான உற்சாகத்துடன் இந்த ஆண்டு தீபத்திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: