வெல்லம் விற்பனை சுறுசுறுப்பு

சேலம், செப்.30:  தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைதவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும் 60 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கரும்பு வெல்லம் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்புக்கின்றனர். இந்த நிலையில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் ஆலைகளில் உற்பத்தி சுறுசுறுப்படைந்துள்ளது. அவ்வப்போது உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சேலம் வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும். இந்த நிலையில் வரும் அக்.4ம் தேதி ஆயுதப்பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சுவாமிக்கு படையிடுவார்கள்.

இதையொட்டி வெல்லத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ₹1300 முதல் ₹1350 என விற்பனை செய்யப்பட்டது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர். அப்போது வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 75 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: