உடன்குடி, செப். 6: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தொண்டர்கள் திரண்டு வருமாறு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பிரசார பயண பாதயாத்திரையை துவக்கி வைக்கவும், 8ம் தேதி நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற புதிய திட்டங்கள் துவக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காகவும் நாளை (7ம் தேதி) காலை 10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். முதல்வரை வரவேற்க மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.