புதுச்சேரி, ஆக. 2: புதுவையில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் 612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை - 35, காரைக்கால் - 3 என மொத்தம் 38 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 6.12 சதவீதம் ஆகும். மாகே, ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், கிருமாம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த 74 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1966 ஆக உயர்ந்துள்ளது.