பெரம்பூர்: சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதியில் சில கடைகள் தொழில் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கி வருவதாக மண்டல அதிகாரி (பொறுப்பு) செந்தில்நாதனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் டில்லிராஜ், வரி மதிப்பீட்டாளர் காமராஜ், ஹரி மற்றும் உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன், மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, கொளத்தூர் பவானி நகர் முதல் தெருவில் உள்ள ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான டெய்லர் கடை, பூம்புகார் நகர் முதல் தெருவில் சிவப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் பாலகணேஷ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, பவானி நகர் செங்குன்றம் ரோடு பகுதியில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான டீ கடை, பூம்புகார் நகர் பகுதியில் உள்ள சசிகலா என்பவருக்கு சொந்தமான சிக்கன் ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட 5 கடைகள் உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்டுவந்தது தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில், நேற்று காலை மேற்கண்ட அந்த 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.