சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் (திமுக) பேசும்போது: அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, இளையான்புரம், காமராஜபுரம் பகுதி மிகவும் பின்தங்கிய தொழிலாளர் இருக்கக்கூடிய பகுதியாகும். அந்த பகுதியில் ஆண்டுதோறும், அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறுவார்கள். அதற்கு ஏற்ப மேல்நிலைப்பள்ளி இல்லை.
இதனால், மாணவர்கள் தங்களுடைய மேல்நிலைப்படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் தொலை தூரம் சென்று பயில சிரமம் ஏற்படுகிறது. இந்த இன்னல்களை போக்க இந்த பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த அம்பத்தூர், கடந்த 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மாநகராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அங்குள்ள ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை பெருநகர மாநகராட்சியுடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.