நாமக்கல், பிப்.26: நாமக்கல் மாவட்டத்தில் நாளை(27ம் தேதி) 1202 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை(27ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், நாமக்கல் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 1.5 லட்சம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அது போலவே தற்பொழுது நடைபெறும் முகாமில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1052 முகாம்களும், நகராட்சி பகுதியில் 150 முகாம்களும் என மொத்தம் 1202 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4927 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும், மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.