தந்தை, அக்காவை கத்தியால் வெட்டியவர் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

பெரம்பூர்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவாயில் முன்பு நேற்று மதியம் 2 மணிக்கு வந்த இளைஞர் ஒருவர், பையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அங்கிருந்த காவலர்கள், அவரை தடுத்து அவர்மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். விசாரணையில், அவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த ஹரிநாத் (34) என்பதும், கடந்த 11ம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறில் தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறியுள்ளார்.

மேலும், தனது குடும்பத்தினர் சொத்துக்காக தன்னை தாக்கியதோடு மனநலம் பாதிக்கப்பட்டவனாக தன்னை சித்தரித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறி அழுதார். இதனையடுத்து, அவர் கொடுத்த தகவல்களை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், அவரை வேப்பேரி காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஏற்கனவே அயனாவரம் பகுதியில் தந்தை, அக்காவை வெட்டிய வழக்கில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில். வேப்பேரி போலீசார் இவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் ஹரிநாத் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: