மக்கள் நெரிசலின்றி பயணித்திட ஏதுவாக கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும்: எம்டிசி அறிவிப்பு

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துகிற வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்றைய தினம் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிற பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, இன்று (10ம் தேதி) சனிக்கிழமை முதல், 300 முதல் 400 பேருந்துகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: