டிங்கரிங் ஷாப்பில் தீவிபத்து 16 கார்கள் எரிந்து நாசம்

சென்னை, ஏப்.9: கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில், ராஜமங்கலம் சீனிவாசா நகரை சேர்ந்த சந்திர ராஜா (55), கார் டிங்கரிங் மற்றும் பெயின்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவவலறிந்து வில்லிவாக்கம், திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் பெயின்டிங் வேலைக்கு வந்த 9 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், டிங்கரிங் பணிக்கு வந்த 7 கார்களும் எரிந்து நாசமானது.  இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஸ்டீபன் (50) என்பவரின் பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடையும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: