பேராவூரணி, ஏப்.8: பேராவூரணி பகுதியில் கொளுத்தும் கோடை வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி பழங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கிச்செல்கின்றனர் தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட பெரும்பாலான பொதுமக்கள் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர், சர்பத் அருந்துவதோடு, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தற்போது தர்பூசணி பழம் உற்பத்தி சீசனை எட்டியுள்ளது. திண்டிவனம், கடலூர், மரக்காணம், புதுக்கோட்டை மாவட்டம் நாட்டுமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும், தர்பூசணி பழங்கள், விவசாயிகளிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.