பேரையூர், ஏப்.3: திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நேற்று டி.கல்லுப்பட்டி பேருந்துநிலையம் அருகில் ஆதரித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பி கம்பம் செல்வேந்திரன், மாநில திமுக தேர்தல்பணி ஒருங்கிணைப்பாளர் சேடபட்டிமுத்தையா, முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், லதாஅதியமான் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கம்பம் செல்வேந்திரன் பேசுகையில், ‘‘அதிமுக அமைச்சரவையில் இரவு மட்டுமல்ல பகல் முழுவதும் விளக்குப்பிடிச்சு தேடினாலும் ஒரு யோக்கியரையும் காண முடியாது. இப்பகுதியின் மண்ணின் மைந்தன் உங்கள் வீட்டருகிலேயே உள்ள வேட்பாளர் மணிமாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.சேடபட்டி முத்தையா பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு சேவை செய்து வளர்ந்ததுதான் திமுக கட்சி. எனக்கு மட்டும் மணிமாறன் மகனில்லை. உங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் மகனாக சேவை செய்பவர். எனவே ஸ்டாலின் தலைமையிலான தமிழக திமுக ஆட்சி அமைய மணிமாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார். இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.