மன்னார்குடி, ஏப்.3: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 67,680 க்கும் மேலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேலான வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.இவர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 18,27ம் தேதிகளில் இரண்டு கட்ட பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன. 3ம் கட்ட பயிற்சி இன்று(3ம்தேதி) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சியில் யார், யார் கலந்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தால் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் முதல் 2 பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனைத்து வாக்குப் பதிவு அலுவலர்களும் 3வது பயிற்சியிலும் கலந்துகொள்ள வேண்டும் எனவும், சில மாவட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆகியோர் மட்டும் கலந்துகொண்டால் போதும் என அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் 2 மற்றும் 3 நிலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 3வது பயிற்சியில் கலந்து கொள்வதா? வேண்டாமா? எனும் குழப்பத்தில் உள்ளனர்.