அனைத்து குடும்பத்துக்கும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும்

உடுமலை, மார்ச் 26: உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஜமீன் கோட்டாம்பட்டி, ஆவல் சின்னாம்பாளையம், வஞ்சியாபுரம், ரங்கசமுத்திரம், விகேவி லேஅவுட், பக்கோதிபாளையம், பாலமநல்லூர், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், வெங்காலம்மன் காலனி, நாச்சிபாளையம், பழையூர், தளவாய்பாளையம், கரட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், பொன்னாண்ட கவுண்டன்புதூர், புளியம்பட்டி, வீரல்பட்டி ஆகிய கிராமங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். அனைத்து குடும்பத்துக்கும் விலையில்லா வாஷிங்மெஷின் வழங்கப்படும். பெண்களின் கஷ்டத்தை உணர்ந்த அதிமுக அரசு, பெண்கள் மகிழ்ச்சியடையும் வகையில் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளது.

முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். முன்னதாக சுங்காரமடக்கு மற்றும் லிங்கமநாயக்கன்புதூரில் அமைச்சர் பிரசாரம் செய்தபோது, அவரது முன்னிலையில் திமுக, மதிமுகவிலிருந்து விலகி ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்.

Related Stories: