கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு பள்ளி மாணவியை தாக்கிய ஒற்றை யானை

வேப்பனஹள்ளி, மார்ச் 25:  கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கியதில் பள்ளி மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மகாராஜகடை அருகே குட்டிகவுன்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி மஞ்சு. இவர்களது மகள் தர்ஷினி(14), வேப்பனஹள்ளி அருகே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். ராமசந்திரனின் வீடு விளைநிலங்களை சுற்றியுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், மாலையில் தர்ஷினி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை, திடீரென தர்ஷினியை நோக்கி வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து சத்தம் போட்டபடியே ஓட்டம் பிடித்தார். அவரை துரத்தி சென்ற யானை தும்பிக்கையால் அவரை தூக்கி வீசியது. சிறுமியின் சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும், மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மகாராஜகடை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அந்த யானை பதுங்கி இருப்பது தெரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: