பழநி, மார்ச் 24: திமுக ஆட்சியில் பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். பழநி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் கோயில் நகரான பழநி மற்றும் சுற்றுலா நகரமான கொடைக்கானல் போன்றவை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தளமாக மாறும்.ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் கிடைக்கும். பழநி நகராட்சி மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தை திருப்பதி போல் ஒன்றிணைத்து பக்தர்களுக்கான வசதிகள் அதிகப்படுத்தப்படும். பழநி நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றித் தரப்படும்.