பெரம்பூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, 2வது நாளாக கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், அவரை ஆதரித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், 2வது நாளாக நேற்று கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். நேற்று மாலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தீட்டி தோட்டம் பகுதியில் ஆட்டோ தொழிலாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஜெய்பீம் நகரில் திருநங்கைகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.